இந்த பதிவகத்தை நான் நிறுத்திவிட்டேன் நண்பர்களே. என் புது பதிவகங்கள்: madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com. அங்கே வருக. சந்திப்போம். நன்றி!
பாமர ஜாதியில் தனி மனிதன்.. படைத்ததினால் உன் பேர் இறைவன்...

சுஜாதா
மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது எந்திரன் டிரைலர் வெளியீட்டு விழா. எந்திரன் எனும் படம் வர ஆணிவேராக இருந்த சுஜாதா பற்றி ஷங்கர் மட்டும் ஒரு வரி பேசினார். அதுவும் சென்ற முறை மலேசியாவில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் ஒருவர் கூட சுஜாதா பற்றி வாய் திறக்கவில்லை. அது குமுதம் இதழில் சுட்டிக் காட்டப்பட்டது. அதனால் போனால் போகட்டும் என்று ஷங்கர் சுஜாதாவை பற்றி ஒரு வரி மட்டும் பேசினார். அது கூட எந்திரனில் வரும் கொசுவை பற்றி சுஜாதா சொன்ன முக்கிய(?) செய்தி பற்றி பேசினார். அடுத்து வந்த ஒருவர் கூட சுஜாதா பற்றி பேசவில்லை. என்றுதான் எழுத்தாளர்களை பற்றி நாம் பேசி இருக்கிறோம்? அது பாரதியாக இருந்தால் கூட. ரைட் விடு...
சரத்குமார் சொன்னார் "எந்திரன் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் பெரும்" என்று. எப்படியெலாம் டெவெலப் ஆகி போய்கிட்டு இருக்காங்க இவிங்க... ஷங்கர் படத்தில் நடிக்க சரத்துக்கு ஆசை என்பதை சூசகமாக தெரிவித்து விட்டு சென்றார்.
வைரமுத்து போப் ஆண்டவரையும் ரஜினியையும் இணைத்து பேசினார். குறும்பு சார் நீங்க...
பலர் கற்பனைக்கு எட்டாத வார்த்தைகளை பேசினார். ஒபாமா எந்திரனை பார்த்தால் அதை ஆங்கிலத்தில் டப்பிங் செய்ய வேண்டும் என்பாராம். எனக்கு தலை சுற்றியது. தனி மனித துதி பாடுதலுக்கு தமிழகத்தில் ஒரு எல்லையே இல்லையா.....முடியல அப்பு.
ரஜினி ரசிகர் ஒருவர் கூறுகிறார் "உலகின் நம்பர் ஒன் சினிமா எந்திரன்". அட்ரா சக்க.. அட்ரா சக்க..
வைரமுத்து அடித்த சூப்பர் சிக்ஸ் "அவதார், டைடானிக் போன்ற படங்களுக்கு இணையான படம் எந்திரன்". கண்ணை கட்டியது. அப்படியே கிராபிக்ஸ் காட்சிகள் அட்டகாசமாக இருந்தாலும் அது வெள்ளைக்காரன் செய்த காட்சிகள் தானே....அது அவனுக்கு தானே பெருமை சேர்க்கும்? முற்றிலும் நாம் உருவாக்கிய கிராபிக்ஸ் காட்சிகள் அமைந்த படம் உலக தரத்துடன் வந்தால் மட்டுமே நாம் பெருமை படலாம். அதுவரை அடக்கி வாசிப்பது நலம். ஏன் இந்த கலவரம்......நிலவரம் தெரியாம?
ஹாலிவுட்டின் பிரம்மாண்ட பிரம்மாக்கள்.
ஸ்பீல்பெர்க்

ஜேம்ஸ் கமேரூன்
பீட்டர் ஜாக்சன்
Steven Spielberg, Peter Jackson, James Cameron போன்ற பிரம்மாண்டங்களின் பிரம்மாக்கள் படைத்த சாதனை எத்தனை.. ஆஸ்கார் விருதுகளையும், வசூலில் உலக சாதனையை போட்டி போட்டு கொண்டு இவர்கள் இயக்கிய படங்கள் எத்தனை...ஆனாலும் ஆஸ்கார் மேடையில் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு அமர்ந்து விடுவார்கள் இந்த ஜாம்பவான்கள். Lord of the Rings மூன்று பகுதிகளையும் பார்த்து விட்டு பல நாள் தூங்காமல் அதன் பிரம்மாண்ட காட்சி அமைப்புகளை கண்டு மிரண்டு இருக்கிறேன். பீட்டர் ஜாக்சன்....சிங்கம். அவர்களை நம்மோடு இணைத்து பேசுவது அநியாயத்தின் உச்ச கட்டம்.
எனக்கு தெரிந்து தமிழில் ஜெமினி நிறுவனத்தின் 'சந்திரலேகா' ஏற்படுத்தியதுதான் அசல் பிரம்மாண்டம்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். பல வருடங்களுக்கு முன்பு தூர்தர்சனில் வெளியான சுஜாதாவின் நாடகம் "என் இனிய இயந்திரா" பற்றி. அன்றே தொழில்நுட்ப மயமாக்கப்பட்ட தமிழ்நாட்டை பற்றி எதிர்கால சிந்தனையுடன் அருமையாக சிந்தித்து இருப்பார் சுஜாதா. ஒரு காட்சி. வீட்டில் இருந்து ஒருவர் வெளியே கிளம்புவதற்கு முன் அவர் ஒரு கருவியை உபயோகித்து அவர் வேலைக்கு செல்லும் பாதையில் போக்குவரத்து எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வார். நெரிசலான போக்குவரத்து என்றால் அவர் வெளியே செல்ல அனுமதி கிடைக்காது. இல்லையெனில் அவர் வெளியே செல்லலாம். இப்படி பல காட்சிகள். ஒரு சில ஆயிரங்கள் போட்டு சிறு செட் அமைத்து எடுக்கப்பட்ட அந்த நாடகம் ஏற்படுத்திய பிரமிப்பு இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை.
எந்திரன் நல்ல படமாக இருக்கும் பட்சத்தில், அதை கண்டிப்பாக நாம் கொண்டாடுவதில் தவறில்லை. இத்தனை காலம் தமிழ் படங்களை அலட்சியமாக பார்த்த ஹிந்தி சினிமா பசங்களுக்கு இந்த படம் வயிற்றில் புளியை கரைத்தால் சந்தோஷம்.

ஆனால், சுஜாதா எனும் மாபெரும் மனிதனை மத்திய அரசுதான் மதிக்கவில்லை.. அது என்றுதான் மதித்தது.. நம் பாரதி, சிவாஜி, நாகேஷ்....உட்பட... எந்திரன் குழுவே... மதிக்காவிட்டாலும்.. எந்திரனில் இருந்து சுஜாதாவை மறைத்து விடாதே...

சுஜாதா.. நீ நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை.......








![[ThirunelveliInippu.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM3RqC0l37MuQu8TZAGc4AgZxxIbx8Lqb2Dp64suGxg_bWIPjqqwIhUGDiTqGSa8ndgUTUzxBnSlqTFaZSAEHzXW5JnUMMeHKLsMJjV4DXeuUwsa4AVjGcNLBm5mGGL1Wge4ip3GS9U76l/s1600/ThirunelveliInippu.jpg)

